மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற சூழலில், ஈரானின் உச்ச தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் மெத்தனப் போக்கை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானியத் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவது மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவித்த ஹக்கீம், இலங்கைக்கு அனைத்து இக்கட்டான காலங்களிலும் உறுதுணையாக இருந்த ஈரானின் தலைவருக்கு நேர்ந்த இந்த துயரத்தை, சர்வதேச சட்ட மீறலாகக் கருதி அரசாங்கம் பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறிவிட்டது என்று மிகவும் கடுமையாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் இத்தகைய அமைதியைக் கடைபிடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்ற ஒரு சூழல் இந்தியாவிலும் நிலவுவதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து மௌனம் காப்பதாகத் தெரிவித்த ஹக்கீம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, இது ஒரு “நடுநிலைமை அல்ல, மாறாக அடிமைத்தனம்” என்று விமர்சித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக முதல்வர் உள்ளிட்ட பல இந்திய மாநில முதல்வர்கள் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூட இது குறித்து முறையான அறிக்கையை வெளியிடாதது வருத்தத்திற்குரியது எனத் தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களை மீறி ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியபோது, தாம் ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்த கருத்து வெக்கமான ஒரு செயல் என குற்றம் சாட்டினார்.
இலங்கை இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் உதவிய ஈரானுக்காக குரல் கொடுக்காமல், அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாக அரசாங்கம் அமைதி காப்பதாக அவர் விமர்சித்தார்.
“அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சலும், மனிதநேயமும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


