ஜூட் சமந்த
வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்த நீர் அருந்தியதாகக் கூறப்படும் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் 12 வயதுடைய மூன்று மாணவிகள், மேலதிக இரத்தப் பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 3ஆம் திகதி பாடசாலை ஆரம்பமானபோது காலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்த மூன்று மாணவிகளும், தமது வகுப்பறைக்குச் சென்று தண்ணீர் அருந்த முற்பட்டபோது அங்கு ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலில் அடையாளம் தெரியாத மாத்திரை போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கண்ட மற்றுமொரு மாணவி, வேறொரு மாணவியின் போத்தலில் இருந்த நீரை அருந்தியுள்ளார். எனினும், அந்த நீரும் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்ததை உணர்ந்த மாணவிகள், இது குறித்துத் தமது வகுப்பு ஆசிரியரிடம் உடனடியாகத் தெரிவித்துள்ளனர்.
வகுப்பு ஆசிரியர் அந்த மாணவிகளை மாரவில பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவர்களைப் பரிசோதித்த வைத்தியர், மாணவிகளுக்கு எவ்வித ஒவ்வாமை அல்லது பாதிப்பு அறிகுறிகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அன்று மாலை வீடுகளுக்குச் சென்ற மாணவிகள் இது குறித்துத் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்துப் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கும் மாணவிகளைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர்களுக்குப் பாதிப்புகள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திய போதிலும், மேலதிக விசாரணைக்காக அவர்களது இரத்த மாதிரிகளைப் பெற்றுச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாணவிகள் அருந்தியதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு (Government Analyst) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


