ஜூட் சமந்த
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் ஒரு கோபுரத்திலிருந்து இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் பாரிய அளவில் புகை வெளியேறுவதாகப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு நாளொன்றுக்கு 900 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் இந்த மின்நிலையத்தில் மூன்று மின்பிறப்பாக்கிகள் (Generators) இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்றாவது மின்பிறப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட கோபுரத்திலிருந்தே மார்ச் 5ஆம் திகதி அதிகாலை முதல் அடர்த்தியான வெள்ளை நிறப் புகை வெளியேறி வருகின்றது. காலையில் கடல் நோக்கி வீசிய காற்றின் திசை, நண்பகலாவதோடு தரைப்பகுதியை நோக்கி மாறியதால் இப்புகை குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது எனவும், இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல்வாதிகளும் நிபுணர்களும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர். மின்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்ட நிலையில், தற்போது இந்த சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரியைப் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தத் தொடங்கியதே இத்தகைய அசுத்தமான புகை வெளியேறக் காரணம் எனப் பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக நுரைச்சோலை மின்நிலையத்தின் பொறியியலாளர் ஒருவரிடம் வினவியபோது, ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த அசாதாரண புகை வெளியேறக்கூடும் எனத் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு என்ன என்பதைக் கண்டறியும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுவது சர்ச்சைக்குரிய அந்த நிலக்கரி தானா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


