இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டுக்கான நெல் அறுவடை நடவடிக்கைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திடம் தற்போது ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் சுமார் 800,000 ஏக்கர் நெல் வயல்களை அறுவடை செய்ய குறைந்தபட்சம் எட்டு மில்லியன் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மகாவலி மண்டலம் சி உள்ளிட்ட முக்கிய விவசாய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ (Daily Mirror) இதழுக்கு அளித்த பேட்டியில் தென்னகோன் தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் நெற்பயிரை அறுவடை செய்ய ஒரு அறுவடை இயந்திரத்திற்கு 10 முதல் 12 லிட்டர் டீசல் தேவைப்படுவதாக தெரிவித்த தென்னகோன், “அரசாங்கத்திடம் உள்ள இந்த மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்பை முறையாக நிர்வகித்து, விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால், எதிர்காலத்தில் நாடு கடுமையான உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
அறுவடை இயந்திரங்கள் அல்லது நீர் இறைக்கும் பம்புகளை எரிபொருள் நிலையங்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதன் காரணமாக, விவசாயிகள் வழக்கமாக பீப்பாய்களில் (Barrels) அல்லது மாட்டு வண்டிகள் மூலமே எரிபொருளைச் சேகரித்து எடுத்துச் செல்வது வழக்கம்.
இருப்பினும், பல எரிபொருள் நிலையங்கள் வெளிப்பக்க போக்குவரத்திற்காக (external transport) எரிபொருளை வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ள தென்னகோன் இந்தச் செயல் விவசாயிகளை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


