அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் முந்தைய உச்ச தலைவராக இருந்த அலி கமேனி, ஒரு வாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts), மொஜ்தபா கமேனியை ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வணிகத் துறைகளில் பெரும் செல்வாக்குக் கொண்ட மொஜ்தபா, தற்போதைய நெருக்கடியான சூழலில் நாட்டை வழிநடத்தத் தகுதியானவர் என்று அந்நாட்டு பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) புதிய தலைவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தப் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது, இது கடந்த 2022 ஜூலைக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும். அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20% உயர்ந்துள்ளது, இதனால் ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. எனினும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல் நீக்கப்பட்டவுடன் எண்ணெய் விலைகள் விரைவாகக் குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மொஜ்தபாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் ஆட்சியாளர்களை “இரக்கமின்றி” தாக்குவோம் என்றும், ஈரானிய ஆட்சியை நிலைகுலையச் செய்யத் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில், இதுவரை 1,332 ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை ஏழு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவுப் படைகளின் தாக்குதல் அச்சம் காரணமாக, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த மோதல் ஒரு “ஆபத்தான புதிய கட்டத்தை” எட்டியுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



