ஜூட் சமந்த
வீதியில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மிகவும் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சந்தேக நபர் ஒருவரை நவகத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பழைய இரும்பு சேகரித்து மீண்டும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ – நவகத்தேகம வீதியில் ஏனைய வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், குறித்த இளைஞர் மிக மோசமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அந்தச் சம்பவம் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், நவகத்தேகம பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
உயர்மட்ட உத்தரவின் பேரில் விரைந்து செயற்பட்ட நவகத்தேகம பொலிஸார், சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு எதிராக, அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் அதன் மூலம் சாவற்ற நரஹத்தி (கொலை முயற்சி) செய்யத் தூண்டியமை ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ், ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



