ஜூட் சமந்த
மாதம்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், 60,000 ரூபா பணம் மற்றும் 14 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக மாதம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகொடியான – ரத்னகிரிய வத்தையைச் சேர்ந்த 59 வயதுடைய அகிலியஸ் புள்ளேகே ஜோசப் என்பவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதுடன், அவரும் அவரது மகளும் மாத்திரமே வீட்டில் தங்கியுள்ளனர். முறைப்பாட்டாளர் தும்பு தொழிற்சாலையிலும் (Fiber mill), அவரது மகள் ஆடைத் தொழிற்சாலையிலும் பணிபுரிகின்றனர்.
தனது மகளின் மேலதிக வகுப்புக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக, அலங்கார மேசையின் இழுப்பறையில் (Dressing table drawer) வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோதே, பணம் காணாமல் போயிருப்பதை அவர் கவனித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சோதனையிட்ட போது, மகளுக்குச் சொந்தமான தங்க நகைகளும் களவாடப்பட்டிருப்பது தெரியவந்தது.
வீட்டின் கதவுகள் அல்லது ஜன்னல்கள் உடைக்கப்படவில்லை எனவும், வீடு திறந்திருந்த நேரத்தில் யாரோ உள்ளே புகுந்து இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும், அயலவர் ஒருவர் அண்மைக்காலமாக அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருவதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாதம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


