ஜூட் சமந்த
துபாயில் தலைமறைவாக இருக்கும் “அடா” (Ada) எனப்படும் திட்டமிடப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் இருவரைச் சிலாபம் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹவ – கரம்பே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும், வென்னப்புவ – கிரிமெட்டியான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவருமாவர். இவர்களில் 37 வயதுடைய சந்தேகநபர் படுவஸ்நுவர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிபவர் என்பதும், அவர் போதைப்பொருள் பயன்பாட்டிற்குத் தீவிரமாக அடிமையானவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி, தங்கொடுவ – களுஅச்சிமுல்ல பகுதியில் இளைஞர் மற்றும் யுவதி ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்தி, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட கும்பல் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 26 ஆம் திகதி 11 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய ஒரு இளைஞரும் யுவதியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் துபாயில் உள்ள “அடா” என்பவரின் கூட்டாளிகள் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த 31 ஆம் திகதி தங்கொடுவ – கெரம்வத்த பகுதியில் காரில் பயணித்தபோது மற்றுமொரு இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை இவர்களே செலுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களது காரில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்கள் மற்றும் ஜிபிஎஸ் (GPS) தரவுகளைப் பரிசோதித்தபோது, இவர்கள் துபாயில் உள்ள “அடா” மற்றும் அவரது மகனான “மிஹிர்” (Mihir) ஆகியோருக்குச் சொந்தமான போதைப்பொருட்களையே விநியோகித்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடம் 28 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேகநபர்கள் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேராவின் நேரடி மேற்பார்வையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த குணசேன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


