ஜூட் சமந்த
சிறுமிகள் இருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வெவ்வேறு நபர்களைப் பள்ளம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்டிகம – வெட்டியகல்வல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே தனது பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 4 வயது 7 மாதங்களையுடையவர் ஆவார். இச்சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
சிறுமி முன்பள்ளி முடிந்து வீடு திரும்பியிருந்த வேளையில், அங்கு வந்த தாத்தா அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்துச் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, அவர் நிக்கவெரட்டிய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது முன்பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். ஆசிரியர் உடனடியாகப் பள்ளம பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரான தாத்தாவைக் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சிலாபம் – வில்பத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 14 வயது 5 மாதங்களையுடைய சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சிறுமியின் தாயாரும் வெளிநாட்டில் பணிபுரிவதுடன், தந்தை கொழும்பில் வேலை செய்கிறார். இதனால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி பாட்டி பாடசாலை நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்த சமயம், மாடுகளைக் கட்டுவதற்காக அங்கு வந்த குறித்த நபர், வெற்றிலை உள்ளதா என வினவி வீட்டிற்குள் நுழைந்து இச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பாட்டி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பள்ளம பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


