ஜூட் சமந்த
புத்தளம் – அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து லொறி சாரதியும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை, புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 16 ஆம் மைல் கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற மிதிவண்டி மீது, அதே திசையில் பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சாலியவெவ – ராஜாங்கனை, யாய 18 பகுதியைச் சேர்ந்த அம்பாவலகே வெல்ஜின் சில்வா (78 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர், முதலில் அழுத்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடனேயே, லொறியைச் செலுத்தி வந்த சாரதி திடீரென நோய்வாய்ப்பட்டதால் அழுத்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சாலியவெவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


