கற்பிட்டி, தேத்தாவாடி மீனவ கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பொதுப்பாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்கு, கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
தேத்தாவாடி பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பாதையை, அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் பாதிக்கப்படும் நிலை உருவானது.
பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம். முஸம்மில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ், பிரதித் தவிசாளர் சமன் குமார மற்றும் குழுவினர் தேத்தாவாடி கிராமத்திற்குச் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
அங்கு நிலவிய சூழலை நேரில் ஆராய்ந்த தவிசாளர், அதிரடியாக தனது முடிவுகளை அறிவித்தார்.
பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள பாதையை எந்தவொரு தனியார் நிறுவனமோ அல்லது சுற்றுலா விடுதியோ ஆக்கிரமிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட சுற்றுலா விடுதியின் பொறுப்பதிகாரியை நேரில் அழைத்து எச்சரித்த தவிசாளர், மீனவர்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாது என கடும் உத்தரவு பிறப்பித்தார்.
பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகப் பாதையைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உண்டு என்பதை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் தெளிவுபடுத்தினார்
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், தவிசாளர் உடனடியாக நாரா (NARA) நிறுவனத்துடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார். கடலிலிருந்து 10 மீட்டர் வரையான சட்டரீதியான கடல் எல்லையை முறைப்படி அளவீடு செய்து, அந்த எல்லையை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைக் கூஞ்சிகளை (Boundary Pillars) நாட்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போதைய தவிசாளரின் இந்த துரித நடவடிக்கையினால் மீனவ சமூகத்தின் நீண்டகாலப் கவலை நீங்கியுள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளின் இந்த அதிரடித் தலையீட்டை தேத்தாவாடி கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.


