ஜூட் சமந்த
இலங்கையின் இரண்டாவது முக்கிய ஈரநில வலயமான ஆரச்சிகட்டுவ – ஆனைவிழுந்தாவ ராம்சர் சரணாலயத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை இந்த முறை பாரியளவில் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச ஈரநில சாசனத்தின் படி, 1397 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த பிரதேசம் ராம்சர் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த சரணாலயத்தினுள் ஆனைவிழுந்தாவ, மையாவ, சுருவில, பின்கட்டிய மற்றும் வெல்லவல என ஐந்து குளங்கள் காணப்படுகின்றன. ரதம்பலா ஓயாவினால் போஷிக்கப்படும் இந்தக் குளங்கள் ‘எல்லங்கா’ (Ellanga system) எனும் குளச் சங்கிலி முறைமையின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஈரநிலத்தில் 47 வகை மீன் இனங்கள், 11 வகை நிலநீர் வாழ்விகள், 34 வகை ஊர்வன, 78 வகை பட்டாம்பூச்சிகள் மற்றும் 168 வகை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, 37 வகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு, தமது குஞ்சுகளுடன் மீண்டும் தாயகம் திரும்புவது வழக்கம். அத்தோடு, சுமார் 2500 குடும்பங்கள் விவசாயம், நன்னீர் மீன்பிடி மற்றும் இறால் வளர்ப்பு போன்ற வாழ்வாதாரங்களுக்காக இந்தக் குளங்களையே நம்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘டிட்ஸ்வா’ (Ditswa) சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் ஆனைவிழுந்தாவ உள்ளிட்ட மூன்று குளங்களின் வரம்புகள் உடைந்து சேதமடைந்தன. இதனால் குளங்களில் இருந்த நீர் முழுமையாக வெளியேறிய நிலையில், தற்போது குளத்தின் தரைப்பகுதி வறண்டு வெடிப்புக்கள் காணப்படுகின்றன.
இந்த நிலைமையால் சரணாலயத்தின் குளிர்ச்சியான சூழல் மற்றும் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில கொக்குகள் மற்றும் நீர் காகங்கள் மாத்திரமே அங்கு எஞ்சியிருப்பதை காணமுடிகிறது. உணவும் நீரும் இன்றி இந்தப் பறவைகளும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உடைந்து போயுள்ள குளக்கட்டுகளை விரைவாக புனரமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், முறையான முன்னுரிமைகள் வழங்கப்படாமல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தான ஆனைவிழுந்தாவ சரணாலயத்தை பாதுகாக்க வேண்டியது தார்மீகப் பொறுப்பாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.



