லெபனானில், மூன்று கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்பினரின் பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதாக கூறி, வீடுகள் மீது இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசுவதாக லெபனான் குற்றச்சாட்டி வருகிறது.
இந்நிலையில், லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, நகுரா மற்றும் தீர் செர்யான் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் ஒட்டுமொத்தமாக வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தெற்கு லெபனானின் லிட்டானி ஆறு வரையிலான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட, 10 லட்சம் பேர், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போரில், லெபனானில் மட்டும் இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


