செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த
மகாவெவ, சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து வீழ்ந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதனை புனரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, மேல் மகாவெவ மற்றும் வீஹேன ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் “தம்வெல் அகார” கால்வாயின் குறுக்கே மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில் சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் மூன்று பாலங்களில் ஒன்றான குறித்த பாலம் புகழ்பெற்ற ஓவியர் சோலியஸ் மென்டிஸ் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடசாலைக்கு தினசரி ஏராளமானோர் வருகை தருவதோடு, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் இப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பயணித்த போது இந்தப் பாலம் திடீரென உடைந்து வீழ்ந்தது. விபத்துக்குள்ளான லொறியின் உரிமையாளர், பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக சுமார் 6 இலட்சம் ரூபாயை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் செலுத்தி தனது வாகனத்தை விடுவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நட்டஈடு அறவிடப்பட்ட போதிலும் பாலத்தைப் புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் பிரின்ஸ்லி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில்:
“எமது பாடசாலையில் 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பாலத்தின் ஊடாகவே வரவேண்டும். பாலம் உடைந்ததால் தற்போது கிராம மக்கள் தற்காலிகமாக ஒரு மரப்பாலத்தை அமைத்துள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை பலனில்லை,” என்றார்.
மேல் மகாவெவ சமூக பொலிஸ் குழுவின் தலைவர் மெக்மில்லன் பெர்னாண்டோ கூறுகையில்:
“உடைந்த நிலையில் உள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் அபாயகரமாக உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருட்டாக இருப்பதால், பாதையை அறியாதவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. இன்னும் ஒரு உயிர் பலி வாங்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
வீஹேன கிராமத்தில் அதிகளவிலான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், எஞ்சியுள்ள ஏனைய இரண்டு பாலங்களும் பலவீனமடைந்து காணப்படுகின்றன. அவை உடைந்தால் இரண்டு கிராமங்களும் முழுமையாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த பாலத்தை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





