இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தவறான தரப்பினருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒரு ‘சைபர் கொள்ளை’ எனத் தெரியவந்துள்ள நிலையில், இது நாட்டின் முழுப் பொருளாதாரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, இது வெறும் பணத் திருட்டு மட்டுமல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என்று சுட்டிக்காட்டினார்.
உலகின் அதியுயர் பாதுகாப்பு கொண்ட அமெரிக்காவின் ‘வெள்ளை மாளிகை’ கட்டமைப்புக்களே ஹேக்கர்களால் ஊடுருவப்படும் நிலையில், இலங்கையின் சைபர் பாதுகாப்பு முறைமைகளில் உள்ள பலவீனங்கள் குறித்து புத்திஜீவித்துவக் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டிய தருணம் இதுவென அவர் குறிப்பிட்டார்.
இந்த பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி பேதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இதற்காக சர்வதேச ரீதியிலான தொடர்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களின் உதவியைப் பெறுவது அவசியமாகும்.
அத்துடன், நாட்டின் திறைசேரி போன்ற மிக முக்கியமான நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இழந்த நிதியை மீண்டும் மீட்பதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் வங்கி முறைமை மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள் காலாவதியானவையா என்பதை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியிலான நிதிப் பரிமாற்றங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கலாநிதி ஹான்ஸ் விஜேசுரிய போன்ற துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ‘ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு’ ஒன்றை உடனடியாக நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சைபர் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பலமான ‘ஃபயர்வால்’ அல்லது நவீன பாதுகாப்பு உத்திகளைப் புகுத்தாவிட்டால், இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
இந்த வெளிப்பாடானது ஒரு சாதாரண செய்தி மட்டுமல்ல, நாட்டின் நிதி இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகும் என்றும் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


