இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சை இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைகளுக்காக நீண்ட காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ (Linear Accelerator) கதிரியக்க இயந்திரங்கள் முறையாக இயங்காததே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். தற்போது பயன்பாட்டிலுள்ள ஐந்து இயந்திரங்களில் இரண்டு முழுமையாக செயலிழந்துள்ளன. இதனால், கதிரியக்க சிகிச்சை (Radiation Therapy) பெறுவதற்காக நோயாளிகள் பல மாதங்கள், சில சமயம் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவிசாவளையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தனது கவலையை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:
“நான் கதிரியக்க சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல எனது நிலைமை மோசமடைந்து வருகின்றது. வைத்தியசாலைக்கு எத்தனை முறை சென்றாலும், எப்போது சிகிச்சை தொடங்கும் என்பதற்கு முறையான பதில் இல்லை. இது எனது குடும்பத்தை மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடுமையாக பாதித்துள்ளது.”
முடங்கியுள்ள PET ஸ்கேன் சேவைகள்
கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் அரச வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் பரிசோதனைகள் முற்றாக முடங்கியுள்ளன. மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இந்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
PET ஸ்கேன் பரிசோதனைக்கு அவசியமான ‘புளோரோடியோக்ஸிகுளுக்கோஸ்’ (FDG) என்ற கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தியாவிலிருந்து இதனை இறக்குமதி செய்யும் நிறுவனம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையில் (NMRA) தனது பதிவை இன்னும் புதுப்பிக்கவில்லை. மருந்து வகையின் கீழ் இதனை மீண்டும் பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 27 அன்று விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
அரசு வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் செய்ய 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் இதற்கு 300,000 ரூபாவிற்கும் அதிகமாக செலவாகிறது. தற்போது நிலவும் இரசாயனத் தட்டுப்பாடு காரணமாக தனியார் துறையிலும் இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அவல நிலைக்கு மத்தியில், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஐந்து ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் பணிகளை NMRA துரிதப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இயந்திரங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய இயந்திரங்கள் அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சையின் முன்னேற்றத்தை அளவிடுவதிலும் PET ஸ்கேன் முக்கியமானது என்பதால், நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்கி உயிர்களைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்ந்தோர் வலியுறுத்துகின்றனர்.


