நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ரீதியில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக, உயர்தரப் பாடநெறிகளான உயிரியல் (Bio), கணிதம் (Maths), வர்த்தகம் (Commerce), கலை (Arts), பொறியியல் தொழில்நுட்பம் (E-Tech), உயிரியல் தொழில்நுட்பம் (B-Tech) உள்ளிட்ட ஆறு வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சாதனை படைத்த இந்த மாணவர்களின் கல்வி முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களினால் பணப்பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சாதனையாளர்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






