கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான பரந்தன் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள், உரிய பராமரிப்பின்றி சிதைவடைந்து காணப்படுவதால் அங்குள்ள வியாபாரிகள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இப்பகுதியில் வீசிய மினி சூறாவளி காற்று காரணமாக, சந்தை கட்டடத் தொகுதி மற்றும் பல வர்த்தக நிலையங்களின் கூரைகள் முற்றாகப் பெயர்க்கப்பட்டு தூக்கி வீசப்பட்டன. இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுப் பல நாட்களாகியும், இதுவரை எவ்விதமான புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ச்சியாகப் பலத்த மழை பெய்து வருகின்றது. சந்தையின் கூரை சீர்செய்யப்படாத நிலையில், அங்குள்ள காய்கறி வியாபாரிகள் மழையிலேயே நனைந்தபடி வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“மழையில் நனைவதால் காய்கறிகள் மிக விரைவாக அழுகிவிடுகின்றன. விற்பனைக்காகக் கொண்டு வரும் பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் வீச வேண்டியுள்ளது. கூரை இல்லாததால் நாங்களும் மழையில் நனைந்தே வியாபாரம் செய்கிறோம்,” எனத் தங்களின் வேதனையை வியாபாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
சந்தை வளாகம் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாலும், சேறும் சகதியுமாகக் காணப்படுவதாலும் நுகர்வோரின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் நாளாந்தம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நுகர்வோர் வரத் தயங்குவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள இந்தப் பகுதியைச் சீரமைக்க அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
“நாங்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் எமது பிள்ளைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, மிக விரைவில் சந்தை கட்டடத் தொகுதியைப் புனரமைத்துத் தர வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.




