இலங்கையில் புகையிலை நுகர்வைக் குறைப்பதென்பது வெறும் சுகாதார இலக்கு மட்டுமல்ல, அது தேசிய அபிவிருத்தியின் முதன்மையான முன்னுரிமையாகும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், சுகாதார சேவை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய “இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கான உத்திகளை மேம்படுத்தல்” குறித்த கலந்துரையாடலும் ஊடகவியலாளர் சந்திப்பும் அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் (Cinnamon Lakeside) ஹோட்டலில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஆசிய பிராந்திய மக்கள் தொகையில், ஆபத்தான நிலையில் உள்ள பிரிவினரிடையே சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதையும், அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சர்வதேச தலையீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சுகாதாரம் தொடர்பான Respire திட்டத்தின் கீழ், இலங்கையின் சில பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
- பேராதனைப் பல்கலைக்கழகம்
- ரஜரட்ட பல்கலைக்கழகம்
- வயம்ப பல்கலைக்கழகம்
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இத்திட்டத்திற்கு கைகொடுத்துள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், அதற்கான உத்திகள் மற்றும் கூட்டு அணுகுமுறைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளும் சர்வதேச ஆலோசனைகளும்
இந்நிகழ்வில், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரசன்ன ஹேரத் அவர்களினால், தனிநபர் புகைப்பிடித்தல் தடுப்புத் தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன், நியூசிலாந்தின் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரப் பாடசாலையின் பொதுச் சுகாதாரத் துறைப் பேராசிரியர் கிறிஸ் புல்லன் (Prof. Chris Bullen) அவர்கள் ‘ஸூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாகப் பிரதான உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான உத்திகள், புகைப்பிடித்தல் மற்றும் சுவாச நோய்கள், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் கூட்டுச் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அதற்கான சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் கொள்கை மாற்றமும்
புகையிலை நுகர்வைக் குறைப்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இங்கு விரிவாகக் கருத்து தெரிவித்தார்.
“உலகில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்குப் பிரதான காரணங்களில் ஒன்றாகப் புகையிலை பயன்பாடு காணப்படுகிறது. புகையிலை சார்ந்த நோய்கள் நாட்டின் சுகாதார அமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. மக்களை நோய்களிலிருந்து பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ வைப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதை விட, அவை ஏற்படுவதற்கு முன்பே தடுப்பதே எமது பொறுப்பாகும்” என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புகைப்பிடித்தல் என்பது 100 வீதம் தவிர்க்கக்கூடிய ஒன்று எனவும், புகையிலை தயாரிப்புகளுக்கான வரிகளை அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையிலைக் கைத்தொழிலானது மறைமுக சந்தைப்படுத்தல் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகள் மூலம் இளைஞர்களையே இலக்கு வைக்கிறது. எனவே, புதிய வடிவிலான அனைத்து நிக்கோடின் அடிமைத்தனங்களுக்கும் எதிராக அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாறிவரும் சவால்களுக்கு ஏற்ப எமது கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், Respire ஸ்ரீ லங்கா திட்டத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Dr. Rajesh Sambhajirao Pandav) ஆகியோர் கலந்துகொண்டனர்.


