கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ‘கிரீன் செனல்’ (Green Channel) ஊடாக இலங்கைக்குள் கடத்த முயன்ற 14 கிலோவிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 140.56 மில்லியன் ரூபா (14 கோடி ரூபாவிற்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட கடத்தல் முறியடிப்பு
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து வருகை தந்த இரு இலங்கை பயணிகள், விமான நிலையத்தின் சுங்க சோதனைகள் ஏதுமற்ற ‘கிரீன் செனல்’ பகுதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முயன்றுள்ளனர். எனினும், அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளின் துரித மற்றும் சாதுரியமான சோதனையின் போது இந்த பெரும் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளின் மொத்த எடை 14.562 கிலோகிராம் என சுங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் மீதும், கைப்பற்றப்பட்ட 14 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீதும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இக்கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


