இலங்கை வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட சைபர் கொள்ளை சம்பவம் தொடர்பில், உள்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI இன் விசேட நிபுணர்கள் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அண்மையில் இலங்கை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும், அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்கு செலுத்தப்படவிருந்த 625,000 டாலர்களும் மர்மமான முறையில் இணையவழியாகக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம், அமெரிக்காவின் நிதியியல் கட்டமைப்பு ஊடாகப் பரிமாற்றப்பட்டிருப்பதும், அங்குள்ள இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு அது சென்றடைந்திருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த விசாரணை சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுள்ளது.
தற்போது இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் FBI பிரதிநிதிகளுடன் பல கட்டங்களாக விரிவான மற்றும் தீவிரமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். களமிறங்கியுள்ள அமெரிக்க மத்திய குழு, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ‘டிஜிட்டல் தடம்’ எங்கு முடிகிறது என்பதைக் கண்டறிய CID அதிகாரிகளுடன் இணைந்து தற்போது தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.
ஹேக்கர்களின் தந்திரமும், போலி நிறுவனமும்!
2.5 மில்லியன் டாலர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போலி நிறுவனம் தற்போது விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, இந்த நிதி “Biz Solutions” என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் ஊடாகப் பரிமாற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகப் பதிவுச் சேவைகளில் ஈடுபடும் இந்த நிறுவனம், நெகிழ்வான வணிக விதிமுறைகளைக் கொண்ட அமெரிக்காவின் டெலவெயர் (Delaware) மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய கடன் பணம்: நடந்தது என்ன?
இந்த அதிநவீன சைபர் தாக்குதலானது, இலங்கையின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தை (ERD) இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் தொடர்பு வழிகளை சட்டவிரோதமாக ஊடுருவிய ஹேக்கர்கள், ஆஸ்திரேலியாவுக்கு செலுத்தப்படவிருந்த 22.9 மில்லியன் டாலர் இருதரப்புக் கடன் மறுசெலுத்துகை நிதியை இடைமறித்து, திசைதிருப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்படி, ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவிருந்த 6 கொடுப்பனவு சான்றிதழ்களில் (Payment Vouchers) 4 சான்றிதழ்களை ஹேக்கர்கள் தங்கள் வசம் திருப்பியுள்ளனர்.
எளிமையான விதிமுறைகள் காரணமாக ‘டெலவெயர்’ மாநிலத்தில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இறுதிக் கொடுக்கல் வாங்கல் சான்றிதழ்களில் ஒன்று, மிகவும் கடுமையான வங்கி விதிமுறைகளைக் கொண்ட மற்றொரு அமெரிக்க மாநிலத்துடன் தொடர்புடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிரடி உறுதி; தொடரும் மர்மம்!
இந்த மோசடியில் ஈடுபட்டு அமெரிக்காவில் வசித்து வரும் சந்தேகநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அத்துடன், CID அதிகாரிகளுக்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க FBI ஒப்புக்கொண்டுள்ளது.
இருப்பினும், இவ்வளவு தீவிரமான கூட்டு முயற்சிகளுக்கு மத்தியிலும், கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்கள் இறுதியாக எந்த வங்கிக் கணக்குகளைச் சென்றடைந்தன அல்லது அது எவ்வாறு மாற்றப்பட்டது என்பதை விசாரணை அதிகாரிகளால் இன்னும் திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இலங்கைப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள இந்த டிஜிட்டல் கொள்ளையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? நிதியை முழுமையாக மீட்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கான விடைகள் FBI மற்றும் CID இன் கூட்டு விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.


