ஊடகவியலாளர்: ஜூட் சமந்த
புத்தளம்: வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தன்சல்கள்’ (அன்னதானங்கள்) சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தன்சல்களுக்குப் பின்னர் முறையாகக் கழிவுகளை அகற்றாவிட்டால், கொடிய டெங்கு நோய் பரவும் பேராபத்து உள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) இணைந்து இந்த விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதிகாரிகளின் அதிரடி களம் இறக்கம்!
புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திமுத் பொன்வீர அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ், இரு விசேட குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரப் பயணங்களை மேற்கொண்டு தன்சல்களைப் பரிசோதித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கின.
இதற்கு இணையாக, மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் தத்தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்சல்களைப் நேரில் சென்று பரிசோதித்ததுடன், சுகாதார வழிகாட்டல்களை வழங்கினர்.
“தன்சல்கள் நிறைவடைந்ததும், அங்கு சேரும் குப்பைகளை மிகவும் முறையான வழியில் அகற்ற வேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் மழைக்காலத்துடன் சேர்ந்து டெங்கு நோய் மிக வேகமாகப் பரவும் பேராபத்து ஏற்படும்!” — உபுல் ரோஹண (சிலாபம் நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்)
புண்ணியக் காரியமாகச் செய்யப்படும் அன்னதானங்கள், இறுதியில் பொதுமக்களின் உயிருக்கே வினையாக முடிந்துவிடக் கூடாது என்பதில் சுகாதாரத் துறையினர் கண்ணும்கருத்துமாய் உள்ளனர். பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், தேங்கும் குப்பைகளும் தண்ணீரும் டெங்கு நுளம்புகளின் சொர்க்கபுரியாக மாறிவிடும் என்பதால், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுமாறு அவர்கள் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



