ஜூட் சமந்தா | சிலாபம்
மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாக, சிலாபம் – இநிகொடவெல ஸ்ரீ நிக்ரோதாராம புராதன விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘வாஹல்கட’ (கோபுர வாசற்படி) நேற்று பக்திபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து, மனிதநேயத்தின் வலிமையைப் பறைசாற்றினர்.
விகாரையின் புதிய வாசற்படியைத் திறந்து வைக்கும் இந்நாளில், சிலாபம் விஜயாராம அதிபதி பூஜ்ய சிலாபம் சுமநசிறி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர். இவர்களுடன் பந்தாரவத்தை பங்குத் தந்தை அருட்திரு நெவில் செபஸ்டியன் அவர்களும், சவரான ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி சித்திக் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மதங்களைக் கடந்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து நின்ற காட்சி, அந்தப் பகுதிக்கே ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.
இநிகொடவெல கிராமத்தைச் சேர்ந்த ஆர்.டி. தர்மரத்ன மற்றும் சந்திரானி சன்னஸ்கல தம்பதியினர் இணைந்து இந்த உன்னதமான பணியை முன்னின்று நிறைவேற்றியுள்ளனர். பொதுமக்களின் பெரும் பாராட்டுக்குரிய இந்தத் தம்பதியினர், சுமார் 40 இலட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை செலவிட்டு, விகாரையின் இந்த பிரம்மாண்டமான வாசற்படியை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.
மத நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, இத்தகைய சமூகப் பணிகளிலும் உள்ளடங்கியுள்ளது என்பதை இநிகொடவெல கிராம மக்கள் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





