மணிலா: பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் (Mindanao) பிராந்தியத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மிண்டனாவ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. திடீரென பூமி அதிரத் தொடங்கியதால், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியில் ஓடினர். பல இடங்களில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதுடன், சில கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான மற்றொரு அதிர்வும் உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்தது. தொடர்ச்சியான அதிர்வுகள் காரணமாக பலர் திறந்த வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆரம்ப கட்ட தகவல்களின்படி, இந்த பேரிடரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கத்தையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி உயரமான பகுதிகளுக்கு அவசரமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கணநேரத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி தரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
இதற்கிடையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அனைத்து அரசு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுனாமி எச்சரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுங்கள். காத்திருக்க வேண்டாம். நீங்கள் விட்டுச் செல்லும் எந்தப் பொருளையும் விட உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது” என்று மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தின் உண்மையான சேத விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. உலகின் அதிக நில அதிர்வு அபாயம் கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், மீண்டும் ஒருமுறை இயற்கையின் பேராற்றலை நேரடியாக எதிர்கொண்டுள்ளது.




