சுற்றுச்சூழல் நெருக்கடிகளும் பொருளாதார சவால்களும் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவற்றுக்கு மிகச் சிறந்ததொரு தீர்வை முன்வைத்து, இலங்கைக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது புத்தளம் பிராந்தியத்தின் முன்னணி கல்வி நிறுவனமான இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி. பெண்கல்வி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இக்கல்லூரி, தற்போது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், சூழல் சமநிலைக்கும் வலுச்சேர்க்கும் நோக்கில், தனது 26 ஏக்கர் பிரம்மாண்ட நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரு மாபெரும் பசுமைப் புரட்சியில் கால்பதித்துள்ளது.
இதன் முதற்கட்ட மைல்கல்லாக, இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் ‘மரநடுகை திட்டம் 2026’ (Tree Planting Project 2026) இற்கான மரக்கன்றுகள் கையளிக்கும் விசேட நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை, கல்லூரியின் அதிநவீன ‘ஸாமில்’ (Zaamil) கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக அரங்கேறியது. வெறும் உள்ளூர் நிகழ்வாக மட்டுமன்றி, எல்லை கடந்த சர்வதேசக் கரங்களின் கூட்டு முயற்சியாக இது அமைந்திருந்ததுதான் இதன் ஆகப்பெரிய சிறப்பம்சமாகும்.
இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றத்தின் கனடா கிளை (World Forum for Sri Lankan Muslims – Canadian Chapter) வழங்கிய நிதியுதவியுடன், ‘Tree for Mercy Foundation’ அறக்கட்டளை மற்றும் ‘Citigardens’ நிறுவனம் ஆகியவற்றின் நேரடிப் பங்களிப்பில் இத்திட்டம் நனவாகியுள்ளது. இந்த உலகளாவிய கூட்டிணைவானது, கல்லூரியின் சுவர்களோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வித்திடும் நோக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் நன்கொடையாளர்கள் சார்பாக ஹிள்ரு சித்தீக் அவர்கள் கனடாவிலிருந்து நிகழ்நிலையூடாக (Online) இணைந்து ஆற்றிய விசேட உரை மிக முக்கிய அங்கமாக அமைந்திருந்தது. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த நேரடி உரையாடலின் போது, அவர் சுமார் 800 உயர்தர மரக்கன்றுகளை கல்லூரிச் சமூகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இவற்றில் 500 அதிதிடமான தென்னங் கன்றுகளும், 300 பல்வகை கனிதரும் மரக்கன்றுகளும் உள்ளடங்குகின்றன. இவை வெறும் மரங்கள் அல்ல; கல்லூரியின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளை சுயமாக நிவர்த்தி செய்யப்போகும் ‘பசுமை வைப்புக்கள்’ (Green Investments) எனலாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) ஆகியோருடன், தோட்ட அபிவிருத்தி குழுவின் தூண்களான சகோதரர் அலிசிமாக், சகோதரர் நஸீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் பிரதி அதிபர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவிகள் மற்றும் பழைய மாணவியர் அமைப்பின் தலைவி அஷ்ஷெய்கா நும்ரா ஸாஜிதா (இஸ்லாஹி) உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டு, இத்திட்டத்தை வாழ்த்தி வரவேற்றனர்.
“இன்றைய நாளில் நாம் நடும் ஒரு மரம், நாளைக்கான சிறந்ததொரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்ற உன்னதக் கோட்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ‘மரநடுகை திட்டம் 2026’, இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு சுற்றாடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாபெரும் சுயசார்புத் தன்மையை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத்தகையதொரு உன்னதப் பணிக்கு தோள்கொடுத்த புலம்பெயர் சமூகங்களுக்கும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களுக்கும் கல்லூரிச் சமூகம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றது.





