எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மக்களுக்கு நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கிறதா? அல்லது உலக சந்தையைக் காட்டி உள்நாட்டில் பகற்கொள்ளை நடக்கிறதா? என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்திருந்தாலும், தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. ஆனால், இந்த நஷ்டத்திற்கு உண்மையான காரணம் உலக சந்தை விலை உயர்வு அல்ல, மாறாக இலங்கையின் கொள்வனவு முறையில் உள்ள பாரிய ஓட்டைதான் என்பதை நாட்டின் முன்னணி பொருளாதார பகுப்பாய்வு நிறுவனமான ‘publicfinance.lk’ அம்பலப்படுத்தியுள்ளது.
2026 மே மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளைக் கொள்வனவு செய்த உத்தியோகபூர்வ தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் உலக சந்தையில் நிலவிய சராசரி விலைகளை விட, இலங்கை கூட்டுத்தாபனமானது பெட்ரோலுக்காக 15 வீதமும், டீசலுக்காக 13 வீதமும் ‘அதிகப்படியான’ பணத்தை அள்ளி இறைத்துள்ளது. அதாவது, உலகமே குறைந்த விலைக்கு எரிபொருள் வாங்கியபோது, இலங்கை மட்டும் ஏன் சந்தை விலையை விடக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியது என்ற மர்மம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஒருவேளை இலங்கை உலக சந்தையின் சாதாரண விலைக்கு மட்டுமே எரிபொருளைக் கொள்வனவு செய்திருந்தால், இன்று இலங்கையர்களுக்கு மிகக் குறைந்த விலையில் டீசலையும் பெட்ரோலையும் பெற்றிருக்க முடியும். அதேநேரம், கூட்டுத்தாபனத்திற்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டிருக்காது. நீண்டகால விலை சூத்திரத்தின்படி கணிப்பீடு செய்திருந்தால், கடந்த ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 381 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 424 ரூபாவாகவும் மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்த விலையில் அரசாங்கம் வழங்கும் வரிக் கழிவுகளான பெட்ரோலுக்கு 20 ரூபாவும், டீசலுக்கு 100 ரூபாவும் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நடந்ததோ தலைகீழ்! கூட்டுத்தாபனம் உலக சந்தை விலைக்குப் புறம்பான அதிக செலவில் எரிபொருளை வாங்கியதால், ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றை 407 ரூபாவிற்கு விற்க வேண்டியதாயிற்று. இது விலை சூத்திரத்தை விட 26 ரூபா அதிகமாகும். அதேபோல் பெட்ரோல் லீற்றர் ஒன்றை 434 ரூபாவிற்கு விற்பனை செய்ததுடன், இது விலை சூத்திரத்தை விட 9 ரூபா அதிகமாகும்.
இந்த தவறான கொள்வனவு விலை முறையினால் கூட்டுத்தாபனத்திற்கும் கட்டுப்படியாகவில்லை, மக்களுக்கும் நிம்மதியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கூட்டுத்தாபனம் வாங்கிய அதிக விலையின்படி அதன் செலவை ஈடுசெய்ய வேண்டுமாயின் பெட்ரோல் 474 ரூபாவிற்கும், டீசல் 436 ரூபாவிற்கும் விற்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஜூன் மாத சில்லறை விலையின்படி கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் லீற்றருக்கு 40 ரூபாவும், டீசலுக்கு 29 ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சுருக்கமாகக் கூறின், உலக சந்தையோடு ஒப்பிடும்போது இலங்கையில் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, ஆனால் கூட்டுத்தாபனம் வாங்கிய கொள்ளை விலையோடு ஒப்பிடும்போது அது நஷ்டத்தில் விற்கப்படுவதாக ‘publicfinance.lk’ சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரிகளின் இந்த நிர்வாகக் குறைபாடுகளுக்கு தற்போதும் நுகர்வோரே பலியாக்கப்பட்டு வருகின்றனர்.


