ஜுட் சமந்த
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவிய பெரும் தொகை பீடி இலை கடத்தல் தன்கொட்டுவ பொலிஸார் அதிரடியாக முறியடிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி மிக்க கடல் வழியைக் கடந்து, இலங்கையின் கரையைத் தொட்ட இந்த சட்டவிரோத சரக்கு, அங்கிருந்து தந்திரமாக லொறி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவையும் தன்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான உளவுப்பிரிவு மிகவும் துல்லியமாக கண்காணித்து வந்துள்ளது.
விவகாரம் சீரியஸாக மாற, வென்னப்புவ – வைக்கால், கம்மல பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று அதிவேகமாக பயணிப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு அவசர தகவல் பறந்தது. சற்றும் தாமதிக்காத பொலிஸ் அதிகாரிகள், அந்த லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முற்பட்டனர்.
எனினும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், லொறியின் சாரதி பொலிஸ் உத்தியோகத்தர்களை நசுக்கி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் வாகனத்தை வேகமாக செலுத்தி தப்பியோட முயன்றுள்ளார். பொலிஸாரின் சாதுரியமான மற்றும் அதிரடியான நகர்வினால் லொறி முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, கடத்தல்காரர்களின் திட்டம் தவிடுபொடியாக்கப்பட்டது.
இதன்போது லொறியை சோதனையிட்டதில் தலா 40 பெரிய பொலித்தீன் மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட, 1,600 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. லொறியில் இருந்த வென்னப்புவ – போலவத்த பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 38 வயதுடைய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
தன்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த அப்புஹாமி தலமையிலான கூட்டு நடவடிக்கையினாலேயே இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


