இலங்கையின் சிறைச்சாலைகள் இன்று கைதிகளின் கூடாரமாக அல்ல, ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடியின் மையப்புள்ளியாக மாறியிருக்கின்றன. வெறும் பத்தாயிரம் (10,000) பேர் மட்டுமே தங்கியிருக்கக்கூடிய சிறை அறைகளுக்குள், இன்று நாற்பதாயிரத்திற்கும் (40,000) அதிகமான மனித உயிர்கள் திணித்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் குற்றவாளிகள் அல்லர், மாறாக பிணை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களே என்ற அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் முன்வைத்த இந்த அதிரடித் தீர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சிறைச்சாலைகளில் இந்த அளவுக்கு நெரிசல் ஏற்படுவதற்குப் பிணை வழங்கும் சட்டங்களில் இருக்கும் இறுக்கமான தன்மையே பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய முன்னாள் நீதியமைச்சர் ஹக்கீம், இந்தச் சட்டங்களில் உடனடியாக நெகிழ்வுத்தன்மை கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, மிகச் சிறிய அளவிலான தண்டப்பணத்தைக் கூட கட்ட முடியாமல், நீண்டகாலமாகச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாழும் கைதிகளை இனங்கண்டு, அவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதேவேளை, சிறை நெருக்கடிக்குக் காரணமான மற்றொரு முக்கிய தடையாக விளங்குவது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆமை வேகத் தாமதங்களாகும். குறிப்பாக, போதைப்பொருள் வழக்குகளில் இந்தத் திணைக்களத்தின் அறிக்கை வருவதற்குப் பல மாதங்கள் எடுப்பதால், சந்தேகநபர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுகின்றனர். இதற்குத் தீர்வாக, தான் நீதியமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய தீர்மானத்தை அவர் நினைவூட்டினார்.
அதாவது, ஒரு சந்தேகநபர் சிறையிலடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்காவிட்டால் அவருக்குக் கட்டாயமாகப் பிணை வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இத்திணைக்களத்தில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப தற்போதைய நீதியமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை ஒரு வரவேற்கத்தக்க விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் நீதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பாய்ந்து செல்லும் இந்த காலகட்டத்தில், இலங்கையும் நவீன மாற்றங்களுக்குள் நுழைய வேண்டிய தருணம் இதுவாகும். கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் பெரும் செலவுகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் தவிர்க்க வேண்டும் என்றால், சிறை வளாகத்திற்குள்ளேயே நீதிவான்கள் முன்னிலையில் விசாரணைகளை நடத்தும் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்லைன் ஊடாகச் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நவீன ஆலோசனையையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை. போதைப்பொருள் விற்பனையாளர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போதைப்பொருள் பாவனையாளர்களைக் குற்றவாளிகளாகச் சிறைக்குள் அடைக்காமல், அவர்களை நோயாளிகளாகக் கருதி புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். அதோடு, சிறைகளில் நிலவும் அசுத்தமான சூழலால் கைதிகள் கடுமையான மன அழுத்தத்திற்கும் நோய்களுக்கும் ஆளாவதைத் தடுக்க சுகாதார வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மதக் கைதிகளும் தத்தமது மதச் சட்டங்களின்படி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகளும், இடவசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் மிகவும் தீர்க்கமாக வலியுறுத்தியுள்ளார்.


