இலங்கையின் சுகாதாரத்துறை இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. மருத்துவ உலகில் உலக நாடுகளையே வியக்க வைத்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) கலந்த ரோபோ தொழில்நுட்பம், இப்போது முதன்முறையாக இலங்கையிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள், இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.
சுமார் 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பையை அகற்றும் விசேட அறுவை சிகிச்சையும், மற்றுமொரு நோயாளிக்கான மிகச் சிக்கலான சிறுநீரகம் சார்ந்த அறுவை சிகிச்சையுமே இவ்வாறு ரோபோ கைகளின் துணையுடன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கை இனி சர்வதேச தரத்திலான மருத்துவ யுகத்திற்குள் நுழைந்துவிட்டதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
உண்மையில் ரோபோக்கள் தான் இந்த ஆபரேஷனை செய்ததா? இல்லை! இது பலருக்கும் எழும் ஒரு பொதுவான ஐயம். இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் ரோபோக்கள் தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுப்பதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே அது இயங்குகிறது. வைத்தியர் ஒரு விசேட கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து கொடுக்கும் அசைவுகளை, இந்த AI ரோபோ கைகள் நோயாளியின் உடலினுள் மிகத் துல்லியமாகச் செய்கின்றன. மனிதக் கைகளால் எட்ட முடியாத மிக நுண்ணிய இடங்களைக் கூட துல்லியமாக அணுக இந்த AI நிரலாக்கம் வழிவகுக்கிறது.
இந்த அதிநவீன முறையினால் நோயாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்கிறார் வைத்தியர் சமந்தி டி சில்வா. பாரம்பரிய அறுவை சிகிச்சைகளைப் போல பெரிய அளவில் உடலைக் கிழிக்க வேண்டிய தேவையில்லை என்பதால், இரத்தப்போக்கு மிகக் குறைவாகவே இருக்கும். தழும்புகள் ஏற்படுவதும் குறைவு. தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் நீங்குவதுடன், நோயாளிகள் மிக விரைவாகக் குணமடைந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதக் கணிக்கீடுகளில் வரக்கூடிய தவறுகள் இதில் பூச்சியமாக்கப்படுகின்றன.
அதேநேரம், வைத்தியர்களுக்கும் இதில் ஒரு சூப்பர் அம்சம் உள்ளது. அறுவை சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பே, அதனை ஒரு கணினித் திரையில் திட்டமிட்டு, ஒத்திகை பார்ப்பதற்கான விசேட வசதியும் இதில் உள்ளது. இதற்காக எமது நாட்டு வைத்தியர் ஒருவர் சீனாவிற்குச் சென்று விசேட பயிற்சிகளைப் பெற்று வந்துள்ளார் என்பதுடன், அடுத்த கட்டமாக மேலும் 30 வைத்தியர்களுக்கு இந்த நவீன ரோபோ அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகளை வழங்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுவரை காலம் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காகப் பல்லாயிரக்கணக்கான பணத்தைச் செலவழித்துக்கொண்டு இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இனி அந்த கவலை தேவையில்லை! இந்த AI தொழில்நுட்பத்தின் வருகையால், உள்நாட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் இந்த வசதி ஏனைய வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் போது, தெற்காசிய பிராந்தியத்திலேயே இலங்கை ஒரு முதன்மை நவீன மருத்துவ மையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.


