தீயாய் பரவும் டெங்கு அரக்கன்: இலங்கையை உலுக்கும் திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!
நாடெங்கிலும் டெங்கு நோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்த நிலையில், தற்போதைய பேரழிவுக்கு டெங்கு தடுப்பூசி ஒரு உடனடித் தீர்வாக அமையாது என விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டுமே 22,749 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய முன் தினம் (21) ஒரே நாளில் 1,097 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 162 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்குவின் கொடூர பிடிக்குள் சிக்கி இதுவரை 56 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம வெளிப்படுத்தியுள்ளார்.
காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் சிகிச்சை பெறுவதில் மக்கள் காட்டும் காலதாமதமே உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் ஒரே நேரத்தில் பெருமளவிலான நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிப்பால் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அழுத்தமும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
கொசுக்கள் பெருகும் இடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இந்த கொடூர நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவுவதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட மருத்துவர், கொசு உற்பத்தி மையங்களை அழிப்பதே தற்போதைக்கு நம் முன்னால் இருக்கும் ஒரே முதன்மை பாதுகாப்பு அரண் என்றார்.
டெங்கு தடுப்பூசி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது பரவி வரும் தீவிர தொற்றை தடுப்பூசியால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. கொசுக்கள் பெருகும் இடங்களை முற்றாக ஒழிப்பது, கொசுக்கடியிலிருந்து தப்பிப்பது மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவ சிகிச்சையைப் பெறுவது மட்டுமே மரணங்களைத் தடுப்பதற்கான ஒரே வழி” என வலியுறுத்தினார்.
மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,535 ஆக எகிறிய நிலையில், ஜூலையில் நிலமை எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்று உயிர் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.



