சிலாபம் – புத்தளம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து ஒன்று, எதிர்பாராதவிதமாக சினிமாப் பட பாணியில் கைத்துப்பாக்கி மிரட்டலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த இரு கார்கள், ஜயபிம பகுதியில் வைத்து ஒன்றையன்று முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் தீவிரத்தால் ஒரு காருக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், உண்மையான அதிர்ச்சி அதன்பிறகே ஆரம்பமானது. சேதமடைந்த காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர், நிதானமிழந்து தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மற்றைய காரில் இருந்தவர்களை நோக்கி நீட்டி, கடுமையாகப் அச்சுறுத்தியுள்ளார். வீதியின் நடுவே நடந்த இந்தத் திடீர் சம்பவத்தைக் கண்டு காரிலிருந்தவர்கள் சொல்லொணா அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தத் திடீர் மிரட்டலால் காரில் பயணித்த பெண் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி (Shock) மயக்கமடைந்த நிலையில், உடனடியாகச் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாகச் செயற்பட்ட சிலாபம் பொலிஸார், களத்தில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 50 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். மீரிகம – கண்டலம பகுதியைச் சேர்ந்த இவரிடமிருந்து 9mm ரக கைத்துப்பாக்கி மற்றும் 06 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில், இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு அவருக்குச் சட்டப்பூர்வ அனுமதிப்பத்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை, விபத்துக்குள்ளான மற்றைய காரைச் செலுத்திய பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த நபர், சம்பவத்தின் போது பலமாக மது அருந்தியிருந்தது பொலிஸ் சோதனையில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஜுட் சமந்த


