இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் – முன்னேஸ்வரம் ஈஸ்வர மகா தேவஸ்தானத்தின் வருடாந்த நிக்கினி (ஆடி) மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 31-ஆம் திகதி காலை 10.00 மணிக்குக் கொடியேற்றத்துடன் (கபசிடுவீம) மிகவும் விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.
இறை வழிபாட்டிற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளவிருக்கும் இந்தத் திருவிழா குறித்து விசேட ஊடகவியலாளர் சந்திப்ப ஒன்றை நடாத்திய ஆலயத்தின் பிரதம குருக்கள் எஸ். பத்மநாப குருக்கள், இம்முறை திருவிழா தொடர்பாக மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஜூலை 31-ஆம் திகதி தொடங்கும் இந்த மஹோற்சவம் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இக்காலப்பகுதியில் நாள்தோறும் விசேட பூஜைகளும் உள்வீதி, வெளிவீதி உலாக்களும் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீமிதிப்பு உற்சவமும், ஆகஸ்ட் 27-ஆம் திகதி சிலாபம் – தெதுருஓயாவில் தீர்த்தோற்சவச் சடங்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய அளவிலான பக்தர்கள் கூடும் நிகழ்வில், தற்பொழுது நாடு முழுவதும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவது அனைவரது பொறுப்பாகும். இதைக் கருத்திற்கொண்டு, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைத் தேவையின்றி எடுத்து வர வேண்டாம் என்றும், கொண்டு வரும் ஏனைய கழிவுப் பொருட்களை ஆலையச் சூழலில் வீசி எறியாது வீடுகளுக்கே திரும்ப எடுத்துச் செல்லுமாறும் பிரதம குருக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் அதேவேளை, அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் டெங்குவைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கும் இந்தத் தேசியப் பணிக்கு ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு பக்தரினதும் கடமையாகும். பக்தர்களுக்கான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை அரச நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வழங்கி வரும் வேளையில், சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்பு முழுமையாக மக்களிடமே உள்ளது.
ஜுட் சமந்த


