குருநாகல், கனேவத்தை – அரன்கேலே பகுதி என்பது அமைதி நிறைந்த சூழலுக்கு பெயர் பெற்றது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் கடந்த மூன்று வருடங்களாக பிரம்மாண்டமான சட்டவிரோத கனிம அகழ்வு ஒன்று எவ்வித தடங்கலுமின்றி அரங்கேறி வந்திருக்கிறது. பூகோளவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த மர்ம வலையமைப்பு அம்பலமாகியுள்ளது.
வேட்டையில் மாட்டிய மக்கள் பிரதிநிதி
சோதனையின் போது அதிகாரிகளுக்குக் காத்திருந்தது ஒரு பெரும் அதிர்ச்சி. இந்தச் சட்டவிரோத கல் குவாரி இயங்கி வந்த காணி, இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது என்பதும், அவரே இந்த சட்டவிரோத வியாபாரத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்களை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். 1992ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சுரங்க மற்றும் கனிமப் பொருட்கள் சட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றத்தின் மக்கள் பிரதிநிதி ஒருவர் கனிம அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அள்ள அள்ளக் குறையாத உபகரணங்களும் வெடிபொருட்களும்
அதிகாரிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டபோதும், எந்தவொரு பயமும் இன்றி பாறைகளைத் தகர்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சம்பவ இடத்திலிருந்து கல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட 2 கனரக பெக்கோ இயந்திரங்கள், அதிநவீன துளையிடும் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதமாகப் சேமித்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான வெடிபொருட்கள் என்பனவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி வெடிபொருட்களைப் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் நாட்டின் சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
விசாரணைகளின் போது, இந்தக் குவாரிக்காக எடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கடந்த 2023 ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின்னர் எவ்வித புதுப்பித்தலோ அல்லது போக்குவரத்து அனுமதிப்பத்திரமோ இன்றி, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து கல் அகழப்பட்டு கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனால் நாட்டின் இயற்கைச் சூழல் சீரழிந்தது மட்டுமன்றி, அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கிலான வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை நோக்கி நகரும் சட்ட நடவடிக்கை
குருநாகல் பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரும், பறிமுதல் செய்யப்பட்ட பெக்கோ இயந்திரங்கள் மற்றும் வெடிபொருட்களும் குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன. அதிகார பலத்தைப் பயன்படுத்தி இயற்கை வளங்களைச் சூறையாடுபவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஜுட் சமந்த



