சமகி ஜன பலவேகயவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறிக்கு 1.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா என்ற கேள்வி தற்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. ஆனால், சட்ட ரீதியான உண்மைகளின்படி அவரது பதவிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 91(1)(d) மற்றும் 92 ஆகிய பிரிவுகளின் கீழ், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றத்தினால் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே, அவர் மேல்முறையீடு செய்திருந்தபோதிலும், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலேயே அவரது எம்பி பதவி தானாகவே ரத்தாகும். ஆனால், சாமிந்த விஜேசிறிக்கு வழங்கப்பட்டது ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை என்பதால், இந்தச் சட்ட விதிவிலக்கு அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, சிறை தண்டனை அனுபவித்த போதிலும், சாமிந்த விஜேசிறி பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் கலந்துகொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமைத் தொடர்கிறது. இதற்காக, அவர் சிறைச்சாலை திணைக்களத்திடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும். அந்த கோரிக்கை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது அனுமதியுடன் எம்பியைப் பாதுகாப்பாக பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து வசதிகளையும் சிறைச்சாலை திணைக்களம் செய்து தரக் கடமைப்பட்டுள்ளது.


