நீதியை நிலைநாட்ட வேண்டிய அதிகாரத்தில் இருந்துகொண்டே, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீருடையில் இருந்துகொண்டே சட்டத்தின் பிடியில் உள்ளவர்களுடன் இவர் செய்து வந்த ரகசிய உடன்பாடுகளே இந்த வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாகும். இவர் பொலிஸ் உப பரிசோதகராகப் பணியாற்றிய காலத்தில், வழக்குகள் தொடர்பான சந்தேகநபர்கள், முறைப்பாட்டாளர்கள், பிரதிவாதிகள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகளுடன் முறையற்ற நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தொடர்புகளின் பின்னணியில், சட்டவிரோதமான முறையில் பெரும்தொகைப் பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்து, பணச்சலவை நடவடிக்கைகளிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட நுணுக்கமான விசாரணைகளின் முடிவிலேயே இவரின் இந்த நிழல் உலகக் கணக்குகள் அனைத்தும் சட்டத்தின் முன் அம்பலமாகின.
கைது செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஒருவரே குற்றவாளிகளோடு கைகோர்த்து நிழல் பேரங்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


