இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கே உரித்தான வனவிலங்குகளுக்கு இப்போது ஒரு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளையும் வாட்டி வதைக்கும் கடுமையான வறட்சியின் தாக்கம், இப்போது இலங்கையின் மிகப்பெரிய இயற்கை சரணாலயமான வில்பத்து தேசிய பூங்காவையும் விட்டுவைக்கவில்லை. தாகத்தால் தவிக்கும் காட்டின் உயிரினங்களைக் காப்பாற்ற வனஜீவராசிகள் திணைக்களம் இப்போது ஒரு அவசரப் போராட்டத்தையே முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக, வில்பத்து தேசிய பூங்காவின் கிழக்கு வலயத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மரதன்னமடுவ, பர்சிபெந்திவேவா மற்றும் குக்குல்கடுவ ஆகிய பிரதான குளங்களில் நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் காட்டின் மூலைமுடுக்குகளில் இருக்கும் வனவிலங்குகள் நீர் தேடி அலைமோதும் சூழல் உருவாகியுள்ளதுடன், காடுகளை விட்டு வெளியேறி கிறாமங்களுக்குள் புகும் அபாய நிலை உருவாகியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாகக் களத்தில் இறங்கி விலங்குகளின் தாகத்தைப் போக்க விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக, பூங்காவிற்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சீமெந்துத் தடாகங்களுக்கு தண்ணீர் பவுசர்கள் மூலம் நீரைக் கொண்டுவந்து நிரப்பும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. “நீர்நிலைகள் வற்றி வருவதால், விலங்குகளுக்குத் தேவையான குடிநீரைத் தடங்கலின்றி வழங்குவதற்காகவே இந்த பவுசர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என வில்பத்து பூங்காப் பொறுப்பதிகாரி ஆர்.டி.டி.டி. சமரநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது பூங்காவின் ஏனைய வலயங்களில் உள்ள குளங்களில் ஓரளவு நீர்மட்டம் காணப்பட்டாலும், வரும் நாட்களில் இந்த வறட்சியான காலநிலை நீடித்தால் அந்த நீர்நிலைகளும் வெகுவாக வற்றிப்போகும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புத்தளம், அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் வில்பத்து தேசிய பூங்கா, நாட்டின் மிகப்பழமையான மற்றும் பரப்பளவில் மிகப்பெரிய வனப்பகுதியாகும்.
இயற்கையின் இந்தச் சவாலுக்கு மத்தியில், பூங்காவின் அபூர்வ உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் எடுத்துவரும் இந்த அதிரடி நடவடிக்கை வனவிலங்கு ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. வறட்சி தீவிரமடைந்தாலும், காட்டுயிர்களின் ஜீவாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.



