ஜூட் சமந்த
கற்பிட்டி கடற்பரப்பை மையமாக வைத்து இடம்பெறவிருந்த பாரியளவிலான சட்டவிரோதக் கடத்தல் முயற்சியொன்றை புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் விசேட சோதனைப் பிரிவு அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கடல் வழியாக இந்தியாவுக்குக் கடத்துவதற்காகப் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோகிராம் எடையுடைய வலம்புரிச் சங்குகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி, ‘விஜய’ கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த துல்லியமான ரகசியத் தகவலையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த 30ஆம் திகதி மாலை நேரப் பகுதியில் கற்பிட்டி – புதுக்குடியிருப்பு மற்றும் வன்னிமுந்தலம் ஆகிய இரு வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையிலேயே இந்த சட்டவிரோதச் சரக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
முதலில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 உரப்பைகளில் அடைக்கப்பட்ட சங்குகளைக் கைப்பற்றியதுடன், அந்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவலின் அடிப்படையில், வன்னிமுந்தலம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 16 உரப்பைகளில் இருந்த சங்குகளும் கைப்பற்றப்பட்டு, மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
மொத்தமாக கைப்பற்றப்பட்ட 46 பொலித்தீன் உரப்பைகளுக்குள் சுமார் 4,000 சங்குகள் மிக நேர்த்தியாகப் பொதி செய்யப்பட்டுள்ளதாகச் சோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சங்குகளை கடல் வழியாக இந்திய எல்லைக்குக் கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக அங்கிருந்து வேறு சில சட்டவிரோதப் பொருட்களை இலங்கைக்குள் கடத்தி வருவதற்கே திட்டமிட்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பெருமதிமிக்க சங்குகளும் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸவின் நேரடி வழிகாட்டலின் கீழ் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


