- 268 பேரின் உயிர்களைப் பலிகொண்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு நிரூபணம்.
- முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு.
- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்பு.
முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க மிக முக்கிய தீர்ப்பொன்று இன்று வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்த துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறி, 268 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டுகளுக்காக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக மிக நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்பை அறிவித்த மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வில், பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் பிரதிவாதியான பூஜித் ஜயசுந்தரவை குற்றவாளியாகத் தீர்மானித்தனர். நாட்டின் முதன்மைப் பொலிஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் தனது பொறுப்பில் இருந்து எவ்வாறு வழுவினார் என்பதைத் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே தெளிவுபடுத்தியபோது, நீதிமன்றமே அமைதியில் மூழ்கியது.
“2019 ஏப்ரல் 20ஆம் திகதி மாலையே, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் பிரதிவாதிக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது,” என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நாட்டினதும் குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய உயர் பதவியில் இருந்து கொண்டு, இந்தத் தகவலைப் புறக்கணித்ததன் விளைவாகவே 268 அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, 586 பேர் படுகாயமடைந்தனர் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இருப்பினும், இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி விராஜ் வீரசூரிய சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கினார். முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால், பூஜித் ஜயசுந்தரவை விடுவிக்க வேண்டும் என அவர் தனது கருத்துரையில் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் மரண தண்டனைத் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பும் அறிவிக்கப்படவுள்ளதால், நாட்டின் அரசியல் மற்றும் சட்டத் துறையில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.


