பசிபிக் பெருங்கடலின் நடுவே, இயற்கை அன்னையின் கொடையாக மிளிரும் பவளப்பாறைகளும் சுண்ணாம்புக்கற்களும் நிறைந்த ஒரு குட்டித் தீவு… உலக வரைபடத்தில் மிகச்சிறிய புள்ளியாகத் தெரிந்தாலும், இன்று சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளது! ஆம், துவாலு மற்றும் வாடிகன் நகரத்திற்கு அடுத்தபடியாக உலகின் 3வது மிகச்சிறிய நாடான நவுரு, தனது பழம்பெரும் அடையாளத்தை மீண்டும் கையில் எடுத்து அகில உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
12,000 மக்கள் மட்டுமே வாழும் இந்த அமைதியான தீவு நாடு, சாதாரண ஒரு நிலப்பரப்பு அல்ல. அந்நிய ஆதிக்கத்தின் வடுக்களைத் தாங்கி நின்ற ஒரு வரலாற்று மையம்! முதலில் ஜெர்மனியால் காலனித்துவப்படுத்தப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே 1968 ஆம் ஆண்டு சுதந்திர குடியரசாக உருவெடுத்தது. காலப்போக்கில் தொலைந்துபோன தங்கள் தாய்மொழிப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக் கனவு, இப்போது மெய்ப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பாரம்பரியம், தாய்மொழியின் எழுத்துக்கூட்டு மற்றும் தனித்துவமான உச்சரிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், “நவுரு” என்ற பெயர் இனி “நவோரோ குடியரசு” (Republic of Naoero) என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒரு அறிவிப்பு, வெறும் பெயர் மாற்றத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை; சர்வதேச ரீதியிலான பெரும் மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, உலகளாவிய அடையாள அமைப்புகளில் அந்நாட்டின் சர்வதேச குறியீடு ‘NRU’ என்பதிலிருந்து ‘NRO’ ஆக அதிரடியாக மாறுகிறது. அதைவிட முக்கியமாக, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு மாற்றம் குடிமக்களின் அடையாளத்தில் நடந்துள்ளது. இனி அந்நாட்டு மக்கள் “நவ்ருவான்” என்று அழைக்கப்பட மாட்டார்கள்! மாறாக, அவர்களின் தாய்மொழிச் சொல்லான “டெய்-நவோரா” என்ற கம்பீரமான பெயரால் அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த அடையாளத்தையும் பண்பாட்டையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நவோரோ எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறிய நாடாக இருந்தாலும், தன் சுயமரியாதையையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காத நவோரோ குடியரசின் இந்தப் புதிய பயணம், வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது!


