டெய்லி மிரர்: இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தைச் சுற்றி மீண்டும் ஒரு பாரிய நிர்வாகப் புயல் மையம் கொண்டுள்ளது. இம்முறை நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனத்திற்குள் மாத்திரமல்லாமல், அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சுக்குள்ளேயே அதிகாரப் போட்டி வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்குவிற்கும் இடையிலான முரண்பாடு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்கால முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஒருவரை நியமிப்பது தொடர்பிலேயே இந்த உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளதாக விமான சேவை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பில் பிரதி அமைச்சர் முறையான விசாரணை ஒன்றை நடத்தியுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் பிரதி அமைச்சரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும், அமைச்சர் அனுர கருணாதிலக்க அதில் நேரடியாகத் தலையிட்டு விசாரணையை காலையிலிருந்து மாலை வரை தாமதப்படுத்தி, இறுதியில் பாதியிலேயே முடித்து வைத்துள்ளார்.
மறுபுறம், கடந்த 16 மாதங்களாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிரந்தர CEO ஒருவரை நியமிக்கத் தவறியமை குறித்து நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரு கட்ட நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தபோதிலும், தகுதியான ஒருவரைக் கண்டறிய முடியாமல் போனது பெரும் சோகம் என மேற்பார்வைக் குழுவின் தலைவர் எம்பி எஸ்.எம். மரிக்கார் சாடியிருந்தார்.
இந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப நிறுவனத்தின் உள்நாட்டிலிருந்தே இரு அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பிரதி அமைச்சரைக் கலந்தாலோசிக்காமல் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) பிரதானி சமர பெரேராவை இடைக்கால CEO ஆக நியமிக்க அமைச்சர் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், குறித்த அதிகாரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெடித்த பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளும், விசாரணைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்ட ஜே.வி.பி (JVP) சார்பு தொழிற்சங்கத்தின் கொந்தளிப்பும் இந்த நியமனத்தைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. தற்போது தொழிற்சங்கங்கள் அந்த அதிகாரிக்கு எதிராகப் போராடத் தயாராகி வருவதால் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விவகாரம் அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.


