இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிமுக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கையில் நீண்டகாலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி, தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய அரசியலமைப்பு திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்துடன் இந்திய அழுத்தங்கள் நிற்கவில்லை; பெருந்தோட்டத் துறை மக்களுக்கு இந்திய நிதியுதவியின் 4ஆம் கட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறும், எல்லை தாண்டி கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்குமாறும் அவர் இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மையமாகக் கொண்டு 2024 டிசம்பர் மாத கூட்டு அறிக்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்த “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கை நிலப்பரப்பு பயன்படுத்தப்பட மாட்டாது” என்ற வாக்குறுதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மிஸ்ரி, இது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வலுவான அஸ்திவாரமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார மற்றும் இந்திய பிரதமர் மோடியின் விஜயங்களின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தடையின்றி முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


