நாம் தினமும் காலையில் வீட்டை விட்டுப் புறப்படும்போது, மாலையில் பாதுகாப்பாகத் திரும்புவோமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நொடிப் பொழுதில் உயிர்களைப் பறிக்கும் இந்த வீதிப் போரின் அண்மைய திடுக்கிடும் தரவுகளை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, இந்த ஆண்டின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களைப் பகிரங்கப்படுத்தினார். அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நாட்டில் 1,605 கொடூர வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 1,693 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்!
இந்த உயிரிழப்புகளின் பின்னணியில் உள்ள புள்ளிவிவரங்களை ஆராயும்போது, வீதியில் பயணிக்கும் சாமானிய மனிதர்களே அதிகளவில் பலியாகியுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அடங்குகின்றனர். அத்துடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த 119 பேரும், 115 மிதிவண்டி ஓட்டுநர்களும், 136 சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் இந்த வீதிப் பலிபீடத்தில் உயிரைத் துறந்துள்ளனர்.
உயிரிழப்புகளைத் தாண்டி, வீதிகளில் இடம்பெறும் சேதங்களும் விபத்துக்களின் தீவிரமும் மக்களை உரைய வைக்கும் வகையில் உள்ளன. இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 பாரிய விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதுடன், வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்திய 2,388 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், இந்தப் பேரழிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறிய ஆறுதல் செய்தியையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இம்முறை வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்றே குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறாயினும், வீதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் அவதானத்துடன் செயற்பட்டால் மட்டுமே இந்த மரண ஓட்டத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்!


