சொந்தமாக ஒரு பாதுகாப்பான கூரை என்பது ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமை மட்டுமல்ல; அவனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவுமாகும். பொருளாதார நெருக்கடிகளால் தத்தளித்து, சொந்த வீடு என்ற எண்ணமே எட்டாக்கனியாக மாறியிருந்த புத்தளம் பகுதி எளிய குடும்பம் ஒன்றிற்கு தற்போது விடிவு பிறந்துள்ளது!
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட றத்மல்யாய கிராம அலுவலர் பிரிவில், தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பத்திற்கான புதிய வீட்டுத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (10.08.2026) மிகவும் விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை பிரதான இலக்காகக் கொண்டு இயங்கும் ‘சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின்’ முழுமையான நிதியுதவியுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் எளிய குடும்பங்களின் வீடமைப்புக் கனவை நனவாக்கும் உறுதியான உந்துசக்தியாக இந்த முயற்சி மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த தற்காலச் சூழலில், நலிவடைந்த குடும்பங்கள் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய தருணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத் திட்டமானது அக்குடும்பத்திற்கு நிரந்தரப் பாதுகாப்பான வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதுடன், அவர்களது எதிர்கால சந்ததிக்கான நிலையான முதலீடாகவும் அமையவுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சகோதரர் எம்.ஜே.எம்.பைசல் அவர்களும், புத்தளம் பிரதேச சபையின் றத்மல்யாய வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் புத்தளம் பிரதேச செயலாளர் விதானகே , புத்தளம் சமூர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர்,
பாலாவி சமூர்த்தி வங்கியின் முகாமையாளர், புத்தளம் சமூர்த்தி வங்கியின் முகாமையாளர் மற்றும் கிராம அரச உத்தியோகத்தர்களும் இத்திட்டத்தின் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.




