சர்வதேச வலைக்குள் சிக்கும் 73 பாதாள உலகக் கோஷ்டியினர்: IGP பிரியந்த வீரசூரியவின் அதிரடி அறிவிப்பு!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கூண்டோடு நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 முக்கிய குற்றவாளிகளை மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய அதிரடியாக அறிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் பல முக்கிய நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்ற ஒழிப்பு நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் நேரடிப் பாராட்டும், உயர்மட்ட ஒத்துழைப்பும் இந்த நடவடிக்கைகளுக்குக் கிடைத்து வருவதாகப் பொலிஸ் மா அதிபர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இவ்வாறான குற்ற ஒழிப்புச் சோதனைகளை நிறுத்துமாறு தமக்கு எவ்வித வெளி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இச்செயற்பாடுகளைத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுக்குமாறு மட்டுமே சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எனினும், இவ்வாறான கடத்தல்களுக்குப் பின்னால் நின்று முதலீடு செய்தவர்களுக்கும், உதவி புரிந்தவர்களுக்கும் இப்போது கடுமையான நடுக்கமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது என்றார்.
அரசியல்வாதிகள் சிலர் தம்மைக் குறிவைத்து வெளியிடும் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களுக்குத் தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், எந்தவொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“நான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது நாட்டுக்கு அழிவையோ செய்யவில்லை; எனவே எந்தவொரு சிறப்புப் பாதுகாப்பும் இன்றியே நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு என்னால் சுதந்திரமாகச் செல்ல முடியும்” எனத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், மக்களுக்கு முகத்தைக் காட்ட முடியாத நிலை தமக்கு ஏற்படவில்லை எனவும், சமூகத்திற்குப் பொய்யுரைத்து நாட்டைச் சீரழித்த சில அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை உருவாகியுள்ளதாகவும் தனது காட்டமான நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்.


