களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையை நாடிச் செல்லும் மக்களுக்கு உயர்தர, வேகமான மற்றும் வசதியான சிகிச்சை சேவையை வழங்கும் நோக்கில், 134 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச முதலீட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விசேட நிகழ்வில், புனரமைக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் சேவையில் இணைத்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் தற்போதைய கொள்ளளவை உயர்த்தி, நோயாளர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி சேவை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
நோயாளர்கள் நேரடியாகப் பயன்படுத்தும் வெளிநோயாளர் பிரிவு (OPD), பிரதான மருந்தகம், கிளினிக்குகள், வார்டுகளுக்கான அணுகுவழிப் பாதைகள், 21 மற்றும் 22 ஆம் இலக்க விடுதிகள், சுகாதாரக் கல்விப் பிரிவு மற்றும் மனநல சிகிச்சை விடுதி என்பன அதிநவீன முறையில் புனரமைக்கப்பட்டு நோயாளர் சேவையை பலப்படுத்தியுள்ளன.
சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு மாத்திரமன்றி, அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் உகந்த பணிச்சூழலை உருவாக்கும் வகையில் வைத்தியர் விடுதி, தாதியர் ஓய்வறை மற்றும் கனிஷ்ட ஊழியர் ஓய்வறைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிற்றூழியர் கட்டுப்பாட்டு அலுவலகமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் வைத்தியசாலையின் அன்றாட பாவனைக்காக பழுதுபார்க்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, திறைசேரியிலுள்ள அரச நிதியை முறையான திட்டமிடல் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு வினைத்திறனாகப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதாரத் துறைக்கு அவசியமான மனித வளங்களை முகாமைத்துவம் செய்து ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.



