- பங்களாதேஷ் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 309,000 அகதிகள் ராகைன் (Rakhine) மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் குடியிருப்பாளர்கள் என மியான்மர் இராணுவ அரசு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
- பங்களாதேஷினால் வழங்கப்பட்ட 828,824 பேரின் பெயர்ப்பட்டியலில் 308,797 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, 113,507 பேரை அடையாளம் காணமுடியவில்லை எனவும், 4,241 பேர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் மியான்மர் கூறியுள்ளது.
- ராகைன் பிராந்தியத்தில் அராக்கன் இராணுவத்திற்கு (Arakan Army) எதிரான மோதல்கள் நீடிப்பதால், பாதுகாப்பு சூழல் சீரடைந்த பின்னரே மீளழைக்கும் நடவடிக்கை சாத்தியமாகும் என மியான்மர் அறிவித்துள்ளது.
- கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறிய நிலையில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற முயற்சிகள் எவ்வித பலனையும் அளிக்கவில்லை.
- மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிஞ்சா புகலிடக் கோரிக்கையாளர்களை மீளப்பெற மியான்மர் இணங்கியுள்ள போதிலும், உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படின் அவர்களை திருப்பி அனுப்ப முடியாது என மலேசியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரோஹிஞ்சா அகதிகள் விவகாரம்: மியான்மரின் உறுதிப்படுத்தலும் தொடரும் இழுபறியும்!
பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள சுமார் 309,000 பேர் மியான்மரின் பிரச்சினைக்குரிய ராகைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு இராணுவ ஆதரவு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ராகைன் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை முழுமையாக சீரடைந்த பின்னரே அவர்களைத் திருப்பி அழைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என மியான்மர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷினால் ஜூலை 31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்பட்ட 828,824 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலில், 308,797 பேர் ராகைன் மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பது சரிபார்க்கப்பட்டுள்ளது.இதில் 4,241 பேர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என மியான்மர் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளதுடன், மேலும் 113,507 பேரின் விபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மியான்மர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட கடுமையான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து, 700,000 இற்கும் அதிகமான ரோஹிஞ்சா மக்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்குத் தப்பியோடினர்.இவர்களில் பலர் இன்றும் கூட அபாயகரமான கடல் மற்றும் தரை வழிப் பயணங்கள் ஊடாக பிற நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது ராகைன் பிராந்தியத்தில் சுயாட்சி கோரிப் போராடி வரும் ‘அராக்கன் இராணுவம்’ (Arakan Army) என்ற ஆயுதக் குழுவுடன் மியான்மர் இராணுவம் தீவிர மோதல்களில் ஈடுபட்டு வருகின்றது.இதன் காரணமாக அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் தணியும் வரை அகதிகளை மீள அழைத்து வருவது சாத்தியமற்றது என மியான்மர் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மீள்குடியேற்ற விவகாரம் பங்களாதேஷுடனான இருதரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்பதில் மியான்மர் உறுதியாகவுள்ளது. இதற்கு முன்னதாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இருதரப்பு ஏற்பாடுகளின் மூலம் எவரும் தாயகம் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5,000 ரோஹிஞ்சா புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைத்துக்கொள்ள மியான்மர் இணக்கம் தெரிவித்திருந்தாலும், அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் இத்தீர்மானத்தை முன்னெடுக்க முடியாது என மலேசியத் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


