நீதித்துறை சார்ந்த விவகாரங்களில் தமக்கு வழிகாட்டிய சிரேஷ்டர்கள் மற்றும் நிபுணர்களின் விபரங்களை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயங்களை காரசாரமாக முன்வைத்தார்.
நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, “நீதித்துறை விடயங்கள் குறித்து சிரேஷ்டர்கள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி கூறுகிறார்; அப்படியானால் அவருக்குப் பின்னால் நின்று ஆலோசனை வழங்கும் அந்த நிபுணர்கள் யார் என்பதை நாடு அறிய விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.
உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளையும் அவர் இதன் போது பட்டியலிட்டார். உள்நாட்டு சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மட்டுமன்றி, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் வரை இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ள பின்னணியில், ஜனாதிபதி எதனை நோக்கி பயணிக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மக்களின் கவனத்தை ஈர்க்க பிரயத்தனம் செய்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட நாமல், “சிரேஷ்டர்களின் வழிகாட்டல்கள் தேவையில்லை என்று கூறி 159 புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்த பின்னர், இப்போதுதான் அனுபவமுள்ள மனிதர்களின் தேவை உணரப்படுகிறதோ தெரியவில்லை” எனவும் தனது உரையில் விமர்சித்துள்ளார்.


