சிலாபம் – முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஈஸ்வரன் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்புத் திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் நேற்றைய முன்தினம் (22) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் செந்நிறத் தணல் கனன்றெரிய, “ஓம் நமசிவாய” என்ற சிவ நாம கோஷங்கள் விண்ணைப் பிளக்க பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வருகையினால் ஆலயம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
குறிப்பாக, பாரம்பரிய ஆன்மிக வழக்கப்படி உடப்பு பகுதியிலிருந்து விரதமிருந்த பெருந்திரளான பக்தர்கள், பல மைல் தூரம் பாதயாத்திரையாக முன்னேஸ்வரத்தை வந்தடைந்து தீக்குண்டத்தில் இறங்கிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்து சமயத்தின் புனிதமான அக்னி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த தீ மிதிப்புச் சடங்கு, இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமன்றி, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் ஆழமான நம்பிக்கையுடன் அனுஷ்டிக்கப்பட்டு வரும் ஒரு விசேட ஆன்மிக நிகழ்வாகப் போற்றப்படுகின்றது.
(தகவல்: ஜூட் சமந்த)



