மொனராகலை மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியை அண்டிய மவுஆர எல ஆற்றங்கரையில், நாட்டை உலுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சுற்றிவளைப்பில் ரூபா 7 கோடிக்கும் அதிக பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் வலைக்குள் சிக்கியுள்ளது.
அம்பேகமுவ, கொமகல வீதியின் எல்லையில் அமைந்துள்ள மவுஆர ஆற்றங்கரைப் பகுதியில் இரகசியமாகப் பெரும் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினர் அந்தப் பகுதியை அதிரடியாகச் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.
அங்கு கடத்துவதற்குத் தயார் நிலையில் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 1,044 கிலோகிராம் 180 கிராம் நிறையுடைய பாரிய கஞ்சா கையிருப்பைக் கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவரையும் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்தனர். இதன் சந்தைப் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சோதனையின் தொடர்ச்சியாக, அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மறைமுகமாகப் பராமரிக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட கஞ்சா தோட்டத்தையும் பாதுகாப்புப் படையினர் துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.
அந்தத் தோட்டத்தில் செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த 54,096 கஞ்சா செடிகளை அழித்த பொலிஸார், பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சந்தேகநபரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் நேரடிக் கண்காணிப்பில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு, அப்பகுதியில் இயங்கி வந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.


