சிறுவர்களின் எதிர்காலத்தைக் காக்கவா? அல்லது சர்வதேசப் போக்கைப் பின்பற்றவா?
உலகம் முழுவதும் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஆதிக்கத்திலிருந்து அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது நியூசிலாந்து அரசும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான கடுமையான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி முடிவின் பின்னணி என்ன? நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் குறிப்பிடுகையில், “எமது நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.நாட்டில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மூவரில் ஒருவர் தினமும் 5 மணிநேரத்திற்கும் அதிகமாக இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.இது அவர்களின் மனநலம், தூக்கம், கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையை மிகக் கொடூரமாகப் பாதித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சாதாரணமானதல்ல. இன்ஸ்டாகிராம், டிக்ரொக், பேஸ்புக் மற்றும் ஸ்னப்சாட் போன்ற முன்னணி தளங்கள், பயனர் 16 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை உறுதிப்படுத்த முக அடையாளத் தொழில்நுட்பம் (facial age estimation) மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.இதில் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருமானத்தில் 10 சதவீதம் வரை பாரிய அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் தெளிவுபடுத்தியபடி, சிறுவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ இதில் எந்தவித சட்ட நடவடிக்கையோ அபராதமோ விதிக்கப்பட மாட்டாது.
எனினும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆளும் தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ACT மற்றும் NZ First ஆகியவை இச்சட்டத்திற்கு வெளிப்படையாகவே முட்டுக்கட்டை போட்டுள்ளன.அவுஸ்திரேலியாவில் கொண்டுவரப்பட்ட இத்தகைய சட்டம் “முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்றும், சிறுவர்கள் இலகுவாக இத்தடைகளைத் தாண்டிவிடுவார்கள் என்றும் அவை வாதிடுகின்றன.அத்துடன் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும் பல சந்தேகங்களை முன்வைத்து தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.அரசியல் இழுபறிகளுக்கு மத்தியில் நியூசிலாந்து சிறுவர்களின் டிஜிட்டல் சுவர்களை உடைக்குமா இந்தச் சட்டம் என்பது விரைவில் தெரியவரும்.


